Wednesday, June 10, 2009

மறுமலர்ச்சி திமுக மல்லை சத்யா செவ்வி...

மறுமலர்ச்சி திமுக மீண்டும் ஒரு தோல்வியை தேர்தலில் தழுவியுள்ளது, தங்களின் தலைவர் வைகோவிற்கு இணையாக மதிமுகவினர் மதிக்க கூடிய விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள அரசும், ஊடகங்களும் செய்தி வெளியிட்ட இறுக்கமான சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் தமிழ்வெளிக்காக செவ்வியளித்தார்...

மல்லை சத்யா, மதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், சிறந்த பேச்சாளர், வாரிசுகள் மட்டுமே அரசியலில் நிறைந்து கிடக்கும் இக்கட்டத்தில் இளம் அரசியல்வாதிகளில் ஒருவராக பத்திரிக்கைகளில் கெளரவிக்கப்பட்டவர். எளிமையாகவும் இனிமையாகவும் பழகுபவர், பேச ஆரம்பித்தால் புள்ளிவிபரங்களும், தமிழும் துள்ளிவிளையாடுகின்றது.

கேள்விக்கணைகளால் நாம் அவரை துளைத்த போதும் சிக்கலான, சங்கடமான கேள்விகளையும் புன்னகையோடு எதிர்கொண்டு நிதானமாக தீர்க்கமாக பதிலளித்தார்...

நேரம் ஒதுக்கி தமிழ்வெளிக்கு செவ்வியளித்தமைக்கு திரு.மல்லை சத்யா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்...




இனி மல்லை சத்யா அவர்களுடனான செவ்வி

தமிழ்வெளி: வைகோ தோல்வி? யாரால் ஏன்? எப்படி?

மல்லை சத்யா: வைகோ தோல்வி அடையவில்லை, அவரது வெற்றி பறிக்கப்பட்டுள்ளது, அதிகாரத்தில் இருப்பவர்களாலும் அரசு இயந்திரங்களை முறையற்று பயன்படுத்தியதாலும், வாக்குபதிவு இயந்திர முறைகேட்டாலும், ஊழலாலும், பணத்தாலும் அவரது வெற்றி பறிக்கப்பட்டுள்ளது, வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்னப்பட்ட வாக்குகள் இருபத்திரண்டாயிரம் அதிகம் என்றால் எவ்வளவு தூரம் இதில் ஊழல் நடந்துள்ளது?

தமிழ்வெளி: இதை எதிர்த்து முறையிடலாமே?

மல்லை சத்யா:
யாரிடம் முறையிடுவது? முறையிடும் நிலையிலா உள்ளது? தேர்தல் கமிஷனுக்கு செல்லலாமென்றால் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவராலும் பாஜக போன்ற எதிர்கட்சிகளாலும் ஒரு பக்க சார்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவர், நமது நீதிமன்ற நடைமுறைகளும் பரிந்துரைகளும் எவ்வளவு நியாயம் வழங்கும் என்பதும் நமக்கு தெரியும், ஜனாதிபதியும் காங்கிரஸால் நிறுத்தப்பட்டவர் இந்நியலையில் யாரிடம் முறையிட?

தமிழ்வெளி:
மதிமுகவின் பலம் என்ன? பலவீனம் என்ன?

மல்லை சத்யா: மதிமுகவின் பலம் அனைவரும் அறிந்ததே, அது சொல்லி தெரிய வேண்டியதில்லை, அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதி என்று வாழ்ந்து வரும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களே மதிமுகவின் பெரும்பலம்

கொள்கை உறுதிப்பாடில்லாத சுயநலத்தோடு கடந்த காலத்தில் செயல்பட்டு வெளியேறிய சில இரண்டாம் கட்ட தலைவர்களே மதிமுகவின் பலவீனம்.

தமிழ்வெளி: தேர்தல் முடிந்துவிட்டது ஆனாலும், ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருப்பவர்களே முரண்பட்டு பேசுவது ஏன்?

மல்லை சத்யா: அரசியலில் எப்போதும் ஒரே மேடையில் ஏறாத பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்படுகின்றனர், எல்லா அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி தமிழினத்திற்காகத்தான் இணைந்து செயல்படுகின்றோம். இது தொடரும்.

தமிழ்வெளி: ஈழத்தமிழர்கள் பற்றி பேசும் போராடும் இயக்கங்கள் தமிழகத்திலே அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை பற்றி அவர்களின் நலன்களை பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே.

மல்லை சத்யா: இது தவறான குற்றச்சாட்டு, மதிமுக தொடர்ந்து தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ளவர்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் போராடுகிறது, இரண்டாண்டுகளுக்கு முன் என் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் முகாம்களில் ஆய்வு நடத்தினர், சில மாதங்களுக்கு முன் கூட பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முகாம்களுக்கு சென்று ஆய்வு உநடத்தினார், நாங்கள் தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம், இன்றைய சூழலில் தமிழகத்தில் முகாம்களில் உள்ளவர்களுக்கு பிறர் நேரடியாக உதவ இயலாத பல சிக்கல்களும், அனுமதி நடைமுறைகளும் உள்ளன, எனவே தமிழக அரசுதான் அவர்களுக்கு உதவ இயலும், இதற்காகவும் தொடர்ந்து மதிமுகவும் பொதுச்செயலாளரும் போராடுகின்றனர்.

தமிழ்வெளி: தேர்தலில் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இருந்த கூட்டணி தோல்வியை தழுவியதற்கு பணம் ஒரு காரணமென சொல்லப்படுகிறது, இதைத்தாண்டி எப்படி இன உணர்வை ஊட்டுவீர்கள்?

மல்லை சத்யா: மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகளின் வாக்கு எந்திர முறைகேடு, அரசாங்க இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது, அதிகார அத்துமீறல்கள், ஊழல் போன்றவற்றால் பறித்துக்கொண்ட வெற்றியை பெரும்பாலான மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்துவிட்டார்கள் என்று மக்களின் மீது பழி சுமத்தி அதன் மூலம் இவர்களின் முறைகேட்டையும் ஊழலையும் மறைப்பது.

மக்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள் அதனால் தான் மத்திய மாநில ஆளுங்கட்சிகளின் அத்துமீறல், அதிகாரம், வாக்கு எந்திர முறைகேடு, ஊழல், ஊடக பலம் என அத்தனையும் தாண்டி காங்கிரஸ்-திமுக அரசுக்கு எதிராக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளன, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் சில இலட்சங்கள் மட்டுமே.எனவே மக்கள் இன உணர்வோடு தான் உள்ளனர்.

தமிழ்வெளி: ஸ்டாலின் துணை முதல்வர்? உங்கள் கருத்தென்ன?

மல்லை சத்யா: நடந்து கொண்டிருப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி, மன்னராட்சி என்கிற போது வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஜெர்மனியிலே மார்கஸ் அவர்களின் சிந்தனையில் கருவானது கம்யூனிசம், தேசம் தாண்டி அது உருவானதும், வளர்ந்ததும் ரஷ்யாவில் லெனினால்,ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியாரின் அரசியல் வாரிசாக வந்தவர் தந்தை பெரியாரின் மகன் முறையான சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் அல்ல, சம்பத் அவர்களின் மகனும் பெரியாரின் பேரனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட காங்கிரஸ் இயக்கத்தில் தலைவராக இருக்கிறாரே தவிர திராவிட இயக்கத்தில் அல்ல, பெரியாரின் வாரிசாக விளங்கியவர் காஞ்சிபுரத்தில் பிறந்த அறிஞர் அண்ணா, அண்ணா அவர்களின் வாரிசாக அவர்களின் மகன் டாக்டர் பரிமளம் வரவில்லை, அண்ணா அவர்களின் வாரிசு கலிங்கப்பட்டியில் பிறந்த தலைவர் வைகோ அவர்கள் தான். சொத்துகளுக்கு வேண்டுமானல் இரத்த வாரிசுகள் வரலாம் ஆனால் கொள்கைகளுக்கு அல்ல..

ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, மன்னராட்சி நடக்கின்றது, ஆனால் மக்கள் அனைத்துயும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள்.

தமிழ்வெளி: தமிழ்தேசியம் இன்றைக்கு தமிழகத்திலே பரவலாக பேசப்படுகிறது, நிறைய இளைஞர்களை ஈர்க்கின்றது, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல இயக்கங்கள் தமிழ்தேசியத்தையே முன்னிறுத்துகின்றன, எழுபதுகளில் இருந்தது போன்று இப்போது திராவிட சித்தாந்தம் இல்லையே, திராவிடத்தின் தேவை தமிழகத்தில் முடிந்துவிட்டதா?

தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதா?

மல்லை சத்யா: தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல, திராவிடத்திலே உள்ளடங்கியுள்ளது தமிழ்தேசியம், அன்றைக்கு திராவிடம் பேசப்பட்டது இன்றைய தமிழ்நாட்டை மட்டும் வைத்து அல்ல, சென்னை மாகணம் அன்று ஆந்திரா கேரளா கர்நாடாக போன்ற திராவிட இனத்தை சேர்ந்த வேற்று மொழி பேசும் மக்களையும் உள்ளடங்கி இருந்தது. தொடக்ககாலத்தில் பல முண்ணனி திராவிட தலைவர்களும் இந்நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர், மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின் தமிழகத்திலே திராவிடம் என்பது தமிழக நலனை முன்னிறுத்துகிறது.

இந்தியாவிலே இரண்டு இனங்கள், ஒன்று திராவிட இனம், மற்றொன்று ஆரிய இனம், நம் திராவிட இனத்திற்கும் வடவர்களின் ஆரிய இனத்திற்கும் உடை, கலாச்சாரம், உணவு, நிறம் என வேறுபாடுகள் உள்ளன, ஆனால் திராவிட இனத்தில் உள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மக்களிடையே மொழி என்பது ஒரே குடும்ப மொழி, உடை கலாச்சாரம் உணவு பழக்கங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

தமிழ்நாட்டிலே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் அல்லாத திராவிட மொழி பேசும் மக்கள், இவர்களை ஒதுக்கிவிட்டு எந்த அரசியலும் செய்ய முடியாது, தமிழனாக பிறந்துள்ளார்களா என்பதை விட தமிழனாக வாழ்கிறார்களா என்பதே முக்கியம். தமிழனாக பிறந்து தமிழுணர்வின்றி இருப்பவர்களை விட தமிழர்களாக இன உணர்வோடு வாழ்வதே முக்கியம்.

Saturday, May 23, 2009

சிங்கப்பூரில் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்திக்கொண்டுள்ளார் திரு ராஜசேகர்.

உண்ணாநோன்பு போராட்டம் சனிக்கிழமை மே 23 லிருந்து திங்கட்கிழமை மே 25 வரை நடைபெறும்.





தமிழ்வெளி தளத்திற்காக திரு.ராஜசேகரை தொடர்பு கொண்டு உண்ணாநோன்புக்கான ஆதரவை தெரிவித்து சிறு பேட்டி கண்டோம்.

தமிழ்வெளி:
இந்த உண்ணாநோன்பின் நோக்கமென்ன? உங்கள் கோரிக்கை என்ன? இதன் மூலம் என்ன வலியுறுத்த விரும்புகிறீர்கள்?

திரு.ராஜசேகர்:
இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம் தமிழர்களின் உணர்வுகளை சொல்வது மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ கோருவது, போர் பகுதியில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது, ஆனால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு தமிழர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தொடர்பான சரியான நிலவரம் தெரியவில்லை. எலிகளை கொல்வது போல் கணக்கின்றி கொல்லப்பட்டுள்ளனர்.

UN(ஐக்கிய நாடுகள் சபை) மற்றும் Red Cross(செஞ்சிலுவை சங்கம்) போன்ற அமைப்புகளை போர் நடந்த இடங்களுக்கு அனுமதியளித்து ஜெனிவா கன்வென்சன் படி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அடிப்படை தேவைகளான வீடு கட்டி தருதல் போன்ற இயன்ற உதவிகளை சிங்கப்பூர் தமிழர்கள் சார்பாகவும் சிங்கப்பூர் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வலியுறுத்துகிறோம்.



Monday, November 24, 2008

தமிழீழம் தொடர்பான தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்கள் - பகுதி 2

பகுதி- 1 க்கு இங்கே செல்லவும்

6. தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன? ஒருங்கினைந்து போராட வேண்டியதா? அல்லது தனிநபர் போராட்டங்களை இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியதா?

தனித்தனியாக போராட்டங்கள் நடத்துவது என்பது அவ்வளவு பிழை இல்லை, ஆனால் தனித்தனியாக அனைத்துக்கட்சிக்கூட்டங்களை கூட்டுவது தனித்தனியாக சில கட்சிகள் சேர்ந்து முடிவெடுப்பது என்பதெல்லாம் ஆதரவு இயக்கத்தை பிளவு படுத்தும் என்பதோடு மட்டுமல்ல, பலவீனப்படுத்தவும் செய்யும். ஆகையினால் இன்றைக்கு ஆளுங்கட்சியே இதற்கு ஆதரவாக இருக்கும் கட்டத்தில் முதலமைச்சரையும் ஆளுங்கட்சியையும் முன்னிறுத்தி அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும், இவைதான் வலிமை சேர்க்கும், ஒரு வேளை எதிர்கட்ச்சிகளாக இருக்கும் சில கட்சிகள், அதற்கு இணக்கம் தெரிவிக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் தனித்தனி குடைகளின் கீழ இயங்கினாலும் கூட ஒரே கோரிக்கையை முன்வைத்தால் அதுவும் கூட பயன் தரக்கூடியதாகவே இருக்கும், வேறு அணிகளில் இருந்து கொண்டு வேறு முழக்கங்களை வைப்பது தான் சிக்கல்கள் வந்து சேரும் எனவே எல்லோரும் ஒன்றாக ஒரே கூட்டமைப்பின் கீழ் நின்று குரல் கொடுப்பதுவும் போராடுவதும் பயனுடையது. வாய்ப்பில்லாமல் போகுமானால் தனி அணிகளாக நின்று கொண்டு ஒரே கோரிக்கையை எழுப்புவது

7. ஈழப்பிரச்சினை பற்றி அதிகம் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில் ஈழப்பிரச்சினையை அவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும், தெரிந்தவர்கள் அவர்களூக்கு தெளிவிப்பதில் முனைப்பாக ஈடுபடவேண்டும், இது முதல்பகுதி, தெரிவிப்பது எனப்து வெறும் கூட்டம் போட்டு பேசுவதல்ல, இன்றைக்கு நவீன விஞ்ஞான வடிவங்கள் எவ்வளவோ வந்துவிட்டன, அவற்றையும் நாம் மிகச்சரியாக பயப்படுத்த வேண்டும், குறிப்பாக இந்த ஆவண காட்சி படங்கள் பெருவாரியான மக்களிடத்திலே ஒரு ஈடுபாட்டை உருவாக்குகின்றன, இப்போது கூட எனக்காகவும் பேசுங்களேன் என்ற குறுந்தகடு தமிழகத்திலே ஒரு பெரிய அசைவை ஏற்படுத்தியிருக்கிறது, என்று சொல்லலாம், எனவே நாமும் நவீன வடிவங்களை எல்லாம் கையாள வேண்டும்.

இன்றைக்கு திரையுலக கலைஞர்கள் பலர் இதற்கு ஆதரவாக வந்திருக்கிறார்கள், அவர்கள் மூலமாகவும் இந்த செய்திகள் சொல்லப்படுகிற போது இளைஞர்கள் இந்த செய்திகளை கூடுதலாக கேட்பார்கள், எப்போதும் இந்த நாட்டில் என்ன சொல்லப்படுகிறது என்பதை விட அதை யார் சொல்லுகிறார்கள் என்பது தான் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது, அது முறையானதல்ல என்பது வேறு ஆனால் அதுதான் நடை முறையாக இருக்கிறது, எனவே இளைஞர்களை கவர சொல்லுவது, நவீன உத்திகளை கையாண்டு சொல்லுவது, தொடர்ந்த முயற்சிகளில் சலிக்காமல் சொல்லுவது, என்கிற அடிப்படையிலேதான் நாம் இந்த கருத்துகளை இளைஞர்களிடத்திலே கொண்டு போக முடியும், அந்த செய்திகளை புரிந்து கொண்டால் கண்டிப்பாக இளைஞர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,



8. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா? அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா?

அதாவது தடை செய்யப்பட்ட இயக்கங்களை வாய்மொழியாக ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றமே ஒருமுறைக்கு இருமுறை சொல்லிவிட்டது, அதிலும் குறிப்பாக எங்களினுடைய பொடா பிணை வழக்கில் நான் அதை தேதியோடு குறிப்பிட வேண்டுமென்று சொன்னால் 2003 வது ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்தியாவினுடைய உச்ச நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள், நீதிபதி இராஜேந்திரபாபு தலைமையில் எங்களுக்கு பிணை அளித்த போது வாய்மொழி ஆதரவு பொடா சட்டத்தின் கீழ் கூட குற்றமாகாது என்று அறிவித்திருக்கிறார்கள், மறுபடியும் மறுபடியும் நாம் ஆதரித்து பேசுவது குற்றம் என்று சொல்லுவது, ஒரு விதத்திலே நீதிமன்ற அவமதிப்பு என்று நான் கருதுகிறேன்.

இரண்டாவதாக தடையென்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் தான் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம், தடை என்பது எந்த இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இயக்கம் இந்த மண்ணில் செயல்படக்கூடாது என்பதற்கான தடை, இரண்டாவது அந்த இயக்கத்திற்கு நிதி உதவியோ ஆயுத உதவியோ வழங்குவதற்கு மற்றவர்களுக்கு தடை என்பது தான் அதனுடைய சாராம்சமான செய்தியே தவிர ஒரு இயக்கத்தை பற்றி பேசுவது, அது பற்றி கருத்து வெளியிடுவது அதை கூட பயங்கரவாதம் என்று சொல்லுவதும், அதை தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவதும் அடிப்படை சனநாயக உரிமைகளையே மறுப்பதாக ஆகும், மேலும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்தையும் அதனுடைய தடையை விலக்க வேண்டுமென்று கோருவதும் ஒரு சனநாயக கோரிக்கை, அது எந்த விதத்திலும் பயங்கரவாதம் ஆகாது, தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையே பயங்கரவாதமென்று சொல்லுகிறவர்கள், உண்மையில் ரொம்பவும் பயந்து போயிருக்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது, ஆகவே சட்டத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் பேசமாட்டார்கள் பேசக்கூடாது, இன்னும் சரியாய் சொன்னால் இதனை ஆதரித்து பேசுபவர்களை கைது செய் என்று சொன்னால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது என்னுடைய கோரிக்கை.


9. தற்போது இந்தியா என்ன செய்ய வேண்டும்? தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா தலையிட வேண்டும், எப்படி செய்ய வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும், இப்போது இந்தியா மீண்டும் மீண்டும் அந்த சிங்கள் இனவெறி அரசுக்காக ஆதரவாக தலையிட்டுக்கொண்டுள்ளது, ரேடாரை அனுப்புஇவதும், இங்கே பயிற்சி அளிப்பதும் அங்கே போய் பயிற்சி அளிப்பதற்கு அதிகாரிகளை அனுப்புவதுமாக இந்தியாவினுடைய நடைமுறைகள் இருக்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று, இவற்றை மாற்றிக்கொண்டு சிங்கள அரசை மிக்கக்கடுமையாக எச்சரிக்க வேண்டும், ஏறுக்கொள்வதல்ல, வேண்டுகோள் விடுப்பதல்ல, எச்சரிக்கை விட வேண்டும், அதையும் மீறி சிங்கள அரசு தமிழீழ மக்களை படுகொலை செய்தால் அதற்கு அடுத்த நடவடிக்கை எதனையும் இந்திய அரசு எடுக்கலாம், ஏனென்றால் அது உள்நாட்டு பிரச்சினை அல்ல, வங்க தேசத்திலிருந்து அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்ததை காரணம் காட்டித்தான் இந்திராகாந்தி அவர்கள் இது எங்கள் நாட்டு பிரச்சினையாகவும் ஆகிவிட்டது என்று சொன்னார், அதைப்போல இது வரை கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள், என்று சொல்லப்படுகிறது, எனவே தொடர்ந்து அகதிகள் வருகிற போது இது நம் நாட்டு பிரச்சினையாகவும் ஆகிறது, அதை தீர்ப்பதற்கு இந்தியா நேரடியாக நடவடிக்கை எடுத்தாலும் அதில் பிழை இல்லை,

இந்திய அரசை வலியுறுத்துவதை பல அறநெறி போராட்டவகைகளில் முன்னெடுக்கலாம், தங்களுடைய சொந்த சகோதரர்கள், சாவின் விளிம்பில் அவர்களுக்கு உதவுகிற வண்ணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது போல நிதி அளிக்கலாம், உணவளிக்கலாம், உடையளிக்கலாம், இன்னும் பல்வேறு விதங்களில் உதவலாம், எல்லாவற்றையும் தான்டி வடமாநிலங்களில் வெளிநாடுகளிலும் கூட தமிழீழ மக்களின் போராட்டத்தில் இருக்கிற நியாயத்தை அவர்கள் என்ன விதமாக கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லலாம், இவையெல்லாம் ஒரு கட்டம் வரிக்கும் தான் நிகழும், மேலும் மேலும் அங்கே தமிழீழ படுகொலை நடந்து கொண்டே இருந்தால் தமிழகத்திலே ஒரு தன்னெழுச்சியான போராட்டம் வெடிக்கும், வெளிப்படும் அதற்கும் பிறகு அதனை தடுப்பதென்பது அரசுகளுக்கே கடினமானதாக ஆகும் அது மக்களினுடைய போராட்டம், மக்களினுடைய எழுச்சி, அது இந்த தேதியிலே வரும் என்று குறிப்பிட்டு நாள் குறிக்க முடியாது, எனவே தமிழ்மக்களினுடைய பொறுமை எல்லை மீறுவதற்கு முன்பாக இந்திய அரசு நம் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் எனப்து தான் நல்லது,


10. பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள?

அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது.

11.பிற இந்தியர்கள் தமிழரல்லாதவர்களின் எதிர்ப்புக்கு அல்லது ஆதரவின்மைக்கு என்ன காரணமிருக்க முடியும்?

அதற்கு நம்முடைய குறைபாடும் கூட இருக்கின்றது என்று நான் கருதுகிறேன் நாம் இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு எழுச்சியை கொண்டு வந்திருக்கிறோம், இன்றைக்கு தான் அது தானாக எழுந்து இருக்கிறது, நாம் இது வரை இந்த பிரச்சினையை வடநாட்டிற்கு எடுத்து செல்லவில்லை என்பது நம்முடைய குறைபாடு இங்கொன்றும் அங்கொன்றுமாக நாம் தெரிவித்திருக்கிறோம் என்பது போதவில்லை, பெரிய அளவில் பெரிய வீச்சில் இந்த கோரிக்கையை வட நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போனால் இன்றைக்கு வடநாட்டிலும் கூட குறைந்த பல பகுதிகளில் நமக்கு ஆதரவு வந்து சேரும் ஒட்டு மொத்தமான ஆதரவு கிடைக்காதென்றாலும் பெரும்பாலான பரவலான ஆதரவை நாம் பெற முடியும் அதை நோக்கியும் செயல்பட வேண்டும் இங்கே இருக்கிற சின்ன சின்ன .... வெறியர்கள் நம்முடைய ஆவணப்படங்கள் இவற்றையெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்த்து அல்லது குறைந்த பட்சம் ஒலிபெயர்த்து அதை நாம் கொண்டு செல்ல வேண்டும் அந்த வேலையை செய்தால் தான் ஓரளவிற்கு ஆதரவை நம்மாக் அங்கே திரட்ட முடியும்.

12.தொடக்க காலத்தில் வாஜ்பேய், போன்றவர்களையெல்லாம் அழைத்து டெசோ நடத்தியிருக்கிறது, ஆய்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறது, அது தொடர்ந்து செயல்படவில்லை என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்குமில்லையா?

அப்படி சொல்ல முடியாது, அன்றைய சூழல் இன்றைய சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது அன்றைக்கு பல்வேறு போராளி குழுக்கள் இருந்தார்கள், அந்த போராளி குழுக்களை இணைக்க முயற்சியும் கூட இருந்தது, இன்றைக்கு களத்தில் ஒரே ஒரு போராளி குழு மட்டுமே இயங்கிகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் அது போலவே தமிழகத்திலும் அன்றைக்கு இன்றிருக்கும் திமுக, அண்ணா திமுக என்ற இரண்டு வலிமையான கட்சிகள் அன்று இல்லை, எனவே அன்றைக்கு எல்லா கட்சிகளையும் சேர்ப்பது எளிதாக இருந்தது, இண்றைக்கு அதற்கான சூழல் குறைந்து போயிருக்கிறது, எனவே மீண்டும் டெசோவை கொடுத்தாக வேண்டுமென்றோ, டெசோ இருந்தால் தான் இது நடக்குமென்றோ கருத வேண்டியதில்லை. இண்றைய சூழலுக்கு ஏற்பதான் நாம் இன்றைய அரசியலை அமைத்துக்கொள்ள முடியும்.


பேராசிரியர் சுப.வீ அவர்களின் வலைப்பதிவு

http://subavee.wordpress.com/


தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்த பேராசிரியர் சுப.வீ. அவர்களுக்கும், சந்திப்பை நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் தமிழ்வெளி நிர்வாகம் மற்றும் வாசகர்கள் சார்பில் நன்றி கூறுகிறோம்.

Sunday, November 23, 2008

பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்


தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.

அவரின் சிந்தனைகள்.
தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது

தமிழீழம் தொடர்பான பல கேள்விகள் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்றன, மேலும் தமிழீழ பிரச்சினை தொடர்பான சில பொய் பரப்புரைகள் இன்றைய தலைமுறையை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன, எனவே ஈழம் தொடர்பான சில விளக்கங்களை அது சார்ந்த தெளிவுடையவர்களிடம் தமிழ்வெளி தம் வாசகர்களுக்காக தொடர்பு கொண்டு பெற்று வெளியிட முயற்சி எடுத்துள்ளது, பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்ததை நன்றியுடன் வணங்குகிறோம்...

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல் நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளும் அதற்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்களும்

1. தனி ஈழம் உருவானால் இங்கே தனித்தமிழ்நாடு கேட்பார்களே? இது இந்தியஇறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?


இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு கேள்வி, இப்போது பங்களாதேஷ் என்ற நாடு உருவானவுடன் யாரும் தனி வங்காளம் கேட்கவில்லை, அதாவது இது வேறு கோரிக்கை, அது வேறு கோரிக்கை. திராவிட நாட்டு கோரிக்கை என்பது எப்போதோ இங்கு கைவிடப்பட்ட ஒன்று. எனவே இன்று தனித்தமிழீழத்திற்கும் தனி தமிழ்நாடு என்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இரண்டாவதாக இன்றைக்கு தனித்தமிழீழம் என்பது தலைமுறையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அதே போன்று இங்கு எந்த வித போராட்டமு இல்லை, அதனால் தமிழீழம் வந்த உடனே தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்பது வெறும் பயம் மட்டுமல்ல, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் வதந்தி, எப்படியாவது தமிழீழத்தை தடுத்துவிட வேண்டுமென்று கருதுபவர்கள் அதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அதிலே இதுவும் ஒன்று, இதிலே துளிகூட உண்மையில்லை

2. இந்தியா ஆயுதம் தரவில்லையென்றால் பாக்கிஸ்தானோ, சீனாவோ இலங்கைக்குஆயுதம் தரும் வேறு யாரோ தருவதற்கு இந்தியாவே தரலாமே?

இந்தியா ஆயுதம் தருகிறபோதும் கூடத்தான் பாக்கிஸ்தானும் சீனாவும் ஆயுதம் தந்து கொண்டிருக்கிறார்கள், இன்னொன்று இது இந்தியாவுக்கு நல்லது தானே என்பது கூட அடிப்படையில் வெளியுறவுக்கொள்கையில் உள்ள புரிதலில் தவறானது என்பதை காட்டுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் இந்தியா தனக்கொரு சரியான நேச நாட்டை அண்டை நாடாக உருவாக்கிகொள்ளவேண்டும் பங்களாதேஷைப்போல ஒரு தமிழீழத்தை உருவாக்கிக்கொள்வதில் தான் அது கவனத்தை செலுத்த வேண்டும், ஆனால் இன்றைக்கு ஈழத்தை தாக்கி சிங்கள இனவெறியர்களுக்கு துணை போவதன் மூலம் மேலும் மேலும் தனக்கு எதிரான ஒரு சூழலைத்தான் இந்தியா உருவாக்கிக்கொண்டுள்ளது.இந்தியா தான் இலங்கைக்கு உதவியிருக்கிறதே தவிர, ஒரு நாளும் ஒரு போது ஸ்ரீலங்கா அரசு ஒரு போரிலும் இந்தியாவிற்கு உதவியாக இருந்ததில்லை, இப்போது அதைக்காட்டிலும் சீனா முத்துமாலை நடவடிக்கையின் அடிப்படையில் இந்தியாவை சுற்றியிருக்கிற இடங்களையெல்லாம் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது.அதற்காகத்தான் அது இலங்கையையும் கைப்பற்ற முனைகிறது,

ஒரு தமிழீழம் என்கிற நேசம் மிகுந்த ஒரு நாட்டை அண்டை நாடாக உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு வழி. எனவே இந்தியா ஆயுதத்தை சிங்கள அரசுக்கு கொடுப்பதன் மூலம் மேலும் மேலும் அது இந்திய நலனுக்கே எதிரான செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

3. அமெரிக்காவின் தலையீடு என்பது இலங்கை அரசுக்கு உதவியாக அமையும் பட்சத்தில் அதுவும் இந்தியாவிற்கு ஆபத்து தானே? பிறகு ஏன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

இந்தியா வெளியுறவுக்கொள்கை தமிழீழத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாகவே பிழையாக உள்ளது, இந்திராகாந்தி இருந்த போதும் திரு பார்த்தசாரதி இந்தியாவின் தூதராக இலங்கையில் இருந்த காலகட்டத்திலும் அது மிகச்சரியாக இருந்தது.பிறகு ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக வந்து பார்த்தசாரதிக்கு பதில் ரமேஷ் பண்டாரியை வெளியுறவுச்செயலாளராக நியமித்த அந்த நாளிலிருந்து வெளியுறவுக்கொள்கை தவறுதலான பாதையில் நடை போடத்தொடங்கி இன்று வரை அதே பாதையில் தான் அது தொடர்ந்து நடை போட்டுக்கொண்டுள்ளது, எனவே அமெரிக்காவினோட அங்கிருக்கும் ஆட்களைமைப்பு, சீனாவின் உதவி சீனா இலங்கையோடு தமிழீழத்தையும் வளைத்துப்போட முயற்சித்தல் இவை அணைத்துமே இந்தியாவோட நலனுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. எனவே தமிழீழத்தை ஆதரிப்பது என்ற ஒரே ஒரு கொள்கையினால் தான் இந்தியா தன் நாட்டிற்கான நலனை உருவாக்கிக்கொள்ளமுடியும் மற்ற எல்லா வழியும் இந்தியாவுக்கு எதிரானது.

4. கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தரப்பட்டது?

கச்சத்தீவு 1959இலிருந்து அது பற்றிய பேச்சுவார்த்தையை அங்கிருக்கும் இலங்கை அதிபர்கள் தொடங்குகிறார்கள் அது நேருவின் காலத்திலேயே பேசப்படுகிறது. ஆனால் அப்போது அது வலுப்பெறவில்லை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்ப திரும்ப அவர்கள் கச்சத்தீவை ஒரு வித வெறியோடு பேசுகிறார்கள், அது இந்திராகாந்தியின் காலத்திலும் கூட தொடக்கத்திலே அது மறுக்கப்படுகின்றது. ஒரு முறை நாடாளுமன்றத்திலே கூட கச்சத்தீவு முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்க்கு கீழாகத்தான் இருந்திருக்கிறது, சேதுபதி அரசரின் ஆளுமையில் தான் இருந்திருக்கிறது, என்று நாடாளுமன்றத்திலே கூட வெளிப்படையாக சொல்லப்பட்டது, ஆனால் அதற்கு பிறகு ஒன் டு ஒன் மீட்டிங் என்று சொல்லப்படுகின்ற இந்திராகாந்தி சீரிமாவோவும் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆன அந்த சந்திப்பில் கச்சத்தீவை கொடுப்பது என்ற முடிவு ஏற்படுகின்றது, அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றது அப்போது தமிழக அரசு அதை எதிர்க்கிறது, கலைஞர் தலைமையிலான அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மாணம் இயற்றுகிறது.

ஆனால் தமிழக அரசினுடைய அதிகார எல்லை என்ன என்பதை நாம் அறிவோம், அந்த காரணத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எதிர்ப்பை செலுத்த முடியவில்லை. மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட

5. இன்றைக்கும் அதே சூழல்தான், திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றைக்கும் அன்றைக்கும் வேறுபாடு என்ன?

இன்றைக்கு முழுமையாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையிலும் உணர்வுகளை பதிவு செய்யும் வகையிலும் தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்கிறது. மேலும் தொடர்ச்சியான மத்திய அரசோடு ஒரு பேச்சுவார்த்தை என்கிற நிலையில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழக அரசும் திமுகவும் கூட ஒரு கூட்டணியிலே மத்திய அரசில் பங்கு பெற்றிருந்தாலும் கூட இன்றைக்கு ஈழத்திற்கு ஆதரவாக குரல் உயர்த்தி மனித சங்கிலி, மற்ற போராட்டங்கள் போன்றவைகள் எல்லாம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இன்னொன்றையும் நாம் எப்போதும் கவனத்திலே கொள்ளவேண்டும் திமுக என்கிற ஒரு கட்சிக்கும் தமிழக அரசுக்கும் இருக்கிற எல்லைகளுடைய அதிகார எல்லைகளுடைய வரம்பு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு கட்சியோ ஒரு தலைவரோ எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. மக்களினுடைய எழுச்சிதான் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். இன்றைக்கு தமிழகத்திலே தாய் தமிழகத்திலே எழுந்திருக்கிற தமிழீழ ஆதரவு என்பது ஒரு பெரிய நம்பிக்கை கொள்வதாக இருக்கிறது, எனவே இதை வைத்துக்கொண்டு திமுகழகம் வலிமையாக ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக்ழகம் மத்திய அரசிடம் மறுபடியும் மறுபடியும் இந்த கோரிக்கைகளை எடுத்து செல்லும் என்று நாம் நம்புகிறோம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா?அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவாய்ப்புள்ளதா?

பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும்ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள்?

போன்ற தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து கேள்விக்கு விடையளிக்கிறார் பேராசிரியர்.சுப.வீ அவர்கள், அவைகள் அடுத்த பகுதியில் வெளிவரும்
ஒரு வேண்டுகோள்

இந்த நேர்காணலை பயன்படுத்த விரும்புபவர்கள், மேற்கோள் காட்ட விரும்புபவர்கள் இதற்கான சுட்டியையும், தமிழ்வெளி இணையதளத்திற்கான இணைப்பையும் தருமாறு வேண்டுகிறோம்.

Friday, December 14, 2007

புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது, இப்பேட்டியின் முதல்பகுதியை கேட்க ஓசை செல்லாவின் இந்த பதிவிற்கு செல்லவும்

செல்லா: அடுத்த கேள்வி வந்து மாஞ்சோலை பிரச்சினை என்ற மாபெரும் போராட்ட களத்தில் உங்கள் சாதனைகளும் சோதனைகளும் என்ன?

டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்கிறார்:

அதாவது தமிழகத்தின் 5 மாவட்டங்களில் திருநெல்வேலி மாஞ்சோலை, நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி கூடலூர், சேலம் மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களில் தேயிலை காப்பி தோட்டங்களில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல வருடங்களாக புரிகின்றனர், இந்த தேயிலை தோட்டங்கள் பெரும்பாலும் வட இந்திய கம்பெனிகளான டாடா பிர்லா போன்ற பெரிய பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் 5000 முதல் 10000 ஏக்கர் நிலங்கள் உரிமை கொண்டாடுகின்றன, குறிப்பாக மாஞ்சோலை என்று சொல்லப்படுவது திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கும் மணிமுத்தாறுக்கும் இடையிலான மலைப்பகுதி அந்த 9775 ஏக்கர் நிலங்கள் அது அரசுக்கு சொந்தமானது, அந்த நிலங்கள் 10 ரூபாய்க்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அந்த முதலாளி வருடத்திற்கு தரும் குத்தகை வெறும் 10 ரூபாய், அந்த நிலம் எதற்காக கொடுக்கப்பட்டதென்றால் அது 5,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக என்றுதான் அந்த நிலம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த தேயி தோட்டத்தில் பணி புரிபவர்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது, 1951 ம் ஆண்டு ப்ளான்டேசன் லேபர் ஆக்ட்(Plantations Labour Act, 1951) தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காலை எத்தனை மணிக்கு செல்ல வேண்டும், விடுமுறை நாட்கள் எத்தனை, மலைப்பகுதிகளில் என்ன வசதி செய்து தரப்படவேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் காய்கறிவிலைகள் அதிகமாக இருக்கும் என்பதால் தொழிலாளர்களே காய்கறி பயிரிட்டுக்கொள்ள 3 முதல் 6 சென்ட் நிலங்கள் கொடுக்கப்பட்டன, இந்த அத்தனை விதி முறைகளையும் மீறிவிட்டு அந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடைய உரிமையாளராக விளங்கக்கூடிய பிபிடிசி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்று அழைக்கப்பட்ட கூடிய கடந்த பாக்கிஸ்தான் அதிபர் ஜின்னா அவர்களின் பேரன் முசில்வாடியா அவர்கள் இந்த சட்ட விதிகளை மதிக்காமல் தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்திவந்தார்கள்.

அவர்களுக்காக யாராவது குரல் கொடுக்க முன் வந்தால் அவர்களை ஊழல்படுத்துவது, காவல்துறை வைத்து வெளியேற்றூவது, மிரட்டுவது என மிரட்டல் பணிகளைதான் கையாண்டார்களே ஒழிய ஜனநாயக முறைப்படி சட்டத்தை மதித்து எந்த விதமான உரிமைகளையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்கு கேட்க சென்றபோது அங்கிருக்கும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை அதாவது 40 நாட்கள் குழந்தை உடைய தாய்மார்கள் கூட வேலைக்கு வரவேண்டும், சட்டப்படி 40 நாள் குழந்தை இருந்தால் 11 மணிக்கு பால் கொடுக்கவும் மாலை ஒரு மணிநேரம் முன்னாலே அனுப்பவேண்டும் என்பவை சட்ட விதிகள், 40 நாள் குழந்தை பாலும் கொடுக்க முடியாமல் இரவு 8 மணி வரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வேண்டியிருந்தல் பல தாய்மார்கள் பால் கொடுக்க முடியாமல் மார்பகங்கள் வீங்கி அறுவை சிகிச்சை செய்து சிலபேர் மரணத்தை எட்டியதும் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைமைகளை சுட்டி காட்டினார்கள், அதே போல் கீழே அடியாட்களை வைத்து அவர்கள் வீட்டுக்கு முன் வைத்துள்ள காய்கறி தோட்டங்களை அழித்த சம்பவங்களும் சுட்டி காட்டினார்கள், எங்களுக்காக கேட்டுக்கொடுப்பதற்கு யாரும் வரமாட்டேங்கிறார்கள், வந்தாளும் கூட அவர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு பணம் கொடுத்து அவர்களையும் அமுக்கிவிடுகிறார்கள், எங்களுக்கு யாரும் வரமாட்டேங்கிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் நேரத்தில் வருவார்கள் அதன் பிறகு வரமாட்டாஙர்கள் என்றார்கள், நான் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் நிச்சயமாக இந்த பிரச்சினையை எடுத்து கையாளுவேன் என்று சொல்லி அதன் பிறகு தேர்தல் முடிந்தது.

ஒரு நாள் ஆகஸ்ட் மாசத்திலே பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலே ஒரு நாள் முழுமையாக எல்லா விசாரணைகளையும் நடத்தி அதன் பிறகு அந்த கோரிக்கைகளையெல்லாம் தமிழ்நாடு முதலைமைச்சரிடத்திலே எடுத்து சொல்லி ஒரு நாள் ஒரு ஆர்பாட்டத்திற்குதான் ஏற்பாடு செய்தோம் ஆனால் அந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை, நிர்வாகத்திலிருந்து யாருமே வந்து என்னவென்று கூட கேட்கவில்லை, அதை தொடந்து தான் ஏறக்குறைய 70மைல்கள் இரவு 9மணிக்கு பிறகு 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழந்தைகளோடு எனது தலைமையில் நடந்து சென்று திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன்பிறகு போராட்டங்கள் நடைபெற்றன. அதாவது எனது போராட்டம் என்பது மாஞ்சோலையை பொறுத்த அளவில் அதாவது சுதந்திரம் பெற்ற நாட்டில் அடிமையிலுமடிமையாக நடத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுகொடுப்பது தான், ஜனநாயக உரிமைகளை மீட்டு கொடுப்பது தான், அதை மீட்டுக்கொடுப்பதாக சொல்லி வாக்கு கேட்டு வந்த மத்திய அரசும், மாநில அரசும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை, மாறாக அதை அரசியல்ரீதியாக கருதி எனக்கு செல்வாக்கு வந்துவிடுமென ஒடுக்குவதிலே தான் குறியாக இருந்தார்கள், இருந்தாலும் கூட 98,99,2000 போராட்டத்தின் விளைவாக வெறும் 35 ரூபாய் அதிபட்சமாக 53 ரூபாய் கூலி[பெற்ற தொழிலாளர்களுக்கு 78ரூபாய் 85 காசுகள் சம்பள உயர்வு என்னுடைய போராட்டத்தின் மூலமாக மட்டுமே முடிந்தது, இது மாஞ்சோலைதோட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களும்ம் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட 5 இலட்சம் தற்காலிக தொழிலாளர்கள் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூலி உயர்வு கிடைத்தது, எப்படியென்று சொன்னால் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வரலாற்றில் இல்லாத அளவிற்கு கிடைத்தது, இது என்னுடைய போராட்டத்தின் வெற்றி, அதே போல அவர்களுடைய அடக்குமுறைகள் ஒட்டு மொத்த அடக்குமுறைகள் ஓரளவிற்கு குறைவதற்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என்று ஒரு வர்க்கம் இருப்பது தெரிந்தது, அதுவரை யாரும் தெரியவே தெரியாது, தேயிலை தோட்டங்கள் என்றாலே திரைப்படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் விளையாடுவதற்கான பூந்தோட்டம் என்று தானே தவிர அங்கே ஒரு வர்க்கம் அங்கே ரத்தம் சிந்திக்கொண்டிருப்பதாகவோ கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதாகவோ மிருகங்களை விட மோசமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாகவோ யாருக்குமே இன்னும் சொல்லப்போனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களில் 90% பேர் தாழ்த்தப்பட்டவர்கள், அதன்காரணமாகவே யாரும் கண்டுகொள்ளவில்லை, தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காகவே கண்டுகொள்ளப்படவில்லை, ஏனெனில் இவர்கள் அடிமையாக இருக்கதான் ஏனெனில் தன்னுடைய சொந்தக்காரர்கள் எனில் யாரையும் விட்டிருக்கமாட்டார்கள்,இது என் குற்றச்சாட்டு. குறைந்தது அவர்கள் பிரச்சினைகளை வெளியே கொண்டுவர முடிந்ததும் சம்பள உயர்வும் சாதனைகள், ஏன் சம்பள உயர்வு சாதனையென சொல்கிறேன் என்றால் நான் சட்டமன்ற உறுப்பினர் இல்லையென்றவுடன் ஒரே நாளில் 10ரூபாய் சம்பளத்தை குறைத்துவிட்டார்கள், நான் தோற்றவுடனே, 2001 மே யில் தோற்றவுடனே ஜூன் மாதம் சம்பளத்தை குறைத்துவிட்டார்கள்.

வேதனைகள் என்றால் என் மீது அபாண்டமான கொலை குற்றம் சாட்டி கொலைவழக்குபோட்டார்கள் நான் அதிலிருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு தான் விடுதலையடைய முடிந்தது.பின்னடைவு என்பது நான் வெறும் சம்பள உயர்வுக்காக மட்டுமில்லை, அந்த தேயிலை தோட்டங்கள் அந்த நிலங்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்படவேண்டும் என்பது தான் அதை பொறுத்தவரை வெற்றி பெறவில்லை, என்னுடைய போராட்டம் அரசு நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குத்தகையை ரத்து செய்துவிட்டு தொழிலாளர்களுக்கு தரவேண்டும் இந்த போராட்டத்திற்கு தொழிலாளர்களால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை

செல்லா: அவங்க வாழ்வாதாரம்

டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்கிறார் :இந்தியாவை பொறுத்தவரை இடது சாரி இயக்கங்கள் வெறும் கூலி உயர்வு போராட்டத்திற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு இருக்கிறார்கள், கூலி உயர்வு போனஸ் வாங்கிதர மட்டுமே நிற்பார்கள், ஆனால் நிலௌரிமை, மண்ணுரிமைக்கான போராட்டத்தை அவர்கள் துவக்கவேயில்லை. தேயிலை தோட்டங்கள் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வேண்டும் அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படவேண்டும் என்ற வலிமையான கோசத்தை வைக்கின்றேன், அதற்கான போராட்டம் தொடரும்.

செல்லா: இடதுசாரி இயக்கங்கள் அவ்வளோ சொல்றாங்களே, அவங்கலாம் அதில்

டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்கிறார் :அவர்களால் தான் இந்த பின்னடவு ஏற்பட காரணமே, அத்தனை தொழிலாளர்களும் எல்லா சங்கத்திலிருந்தும் வெளியேறிவிட்டார்கள். மூண்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு நடக்கும்போது ஒரு நாள் போண்டா வடை சாப்பிடுவார்கள், ஒரு நாள் சாப்பாடு சாப்பிடுவார்கள், ஒரு நாள் பிஸ்கெட் சாப்பிடுவார்கள், 3 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டால் வந்துட்டு போனதுக்கு கூலி 10, 500 கையில் கொடுத்துவிட்டால் எங்கெங்கு கையெழுத்து போட சொல்கிறார்களே போட்டுவிட்டு போய்விடுவார்கள், 2 ரூபாய் இரண்டரை ரூபாய் சம்பளம் தான் அதிகபட்சமாக உயர்வு இது தான் அவர்கள் போராட்ட வரலாறு, அதை போராட்டமென சொல்ல மாட்டேன், சாதாரணமாக தரைப்பகுதியிலே ஒரு பெண்ணுக்கு 100 150 கூலி கிடைக்குது ஒரு மேசனுக்கு 250-300 ரூ கூலிகிடைக்குது ஒரு டீ மாஸ்டருக்கு இவ்ளோ கிடைக்குது, ஆனால் 12 மணிநேரம் காலையில் 6 மணிக்கு போய் இரவு 8 மணிக்கு இரவில் லாந்தர் விளக்கு வைத்து எடைபோட வேண்டியதில் எத்தனையோ மிருகங்கள் தொல்லைகள்.

இடதுசாரி இயக்கங்கள் இந்த போராட்டத்தில் எனது கரத்தை வலுப்படுத்துவதற்கு பதில் எல்லோருமே மக்கள் பின்னால் வந்துவிட்டார்கள், கிருஷ்ணசாமி பின்னால் போயிட்டாங்க, எப்படி ஆதரவு கொடுப்பது என அரசியல் ரீதியாகத்தான் பார்த்தார்களே தவிர நியாங்களின் அடிப்படையில் ஆதரவு தரவில்லை அது போக அவர்கள் பேஸிக்காகவே இன்னும் வெறும் தப்பு பொருளாதார போராட்டத்தில் தான் இருக்கிறார்களே தவிர அடிப்படையை மாற்றியமைக்கும் போராட்டங்களை முன் வைக்க தயாராகவில்லை

Wednesday, December 5, 2007

பாமரனின் பதில்கள் - 1



பாமரன் - நக்கல், நையாண்டியோடு அதிகாரத்தை கேலிக்குள்ளாக்கும் கலக எழுத்துக்கு சொந்தக்காரர், இவரின் கேலிகள் அதிகாரத்துவத்தை நோக்கி எறியப்படும் ஏவுகனைகள், குமுதத்தில் பாமரன் கடிதங்கள் மூலம் பலராலும் அறியப்பட்டவர், உலக தமிழ் மக்கள் அரங்கம் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் மின் நூலாக தரவிறக்க இங்கே சொடுக்கவும், அவரின் வலைப்பதிவுக்கு இங்கே சொடுக்கவும்.

"பாமரன் பெயரில் மட்டுமே பாமரன்"

தமிழ்வெளி பேட்டிகள்

தமிழ்வெளி இணைய தளம் பேட்டிகள் இங்கே வெளியிடப்படுகின்றன